தமிழக அரசு நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாத உதவித்தொகை ரூ.2000 அறிவித்துள்ளது. எந்த திட்டத்தின் கீழ் அறிவித்துள்ளது, யார் யார் பயனாளர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக தனது பட்ஜெட் உரையை வாசித்தார் அமைச்சர். இதில் பல்வேறு மக்கள் திட்டங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள், புதிய மேம்பாலங்கள் என பல திட்டங்கள் மக்களை கவரும் விதமாக அமைந்து இருந்தது. இதில் சில திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பயன் பெரும் வகையிலும் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக தாயுமானவர் திட்டம் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த முயற்சி பலரிடம் இருந்து பாராட்டை பெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் எடுத்த கணக்கெடுப்பின்படி, சுமார் 50,000 குழந்தைகள் தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நிதியுதவியை 18 வயதை அடையும் வரை குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித்தொகை குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் சவாலான காலகட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு செலவு, கல்வி மற்றும் பிற செலவுகளுக்கு உதவும்.
வறுமையின் சுழற்சியை உடைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி கல்வி என்பதை அரசாங்கம் அங்கீகரித்து, இந்த குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி மற்றும் இதர தொழிற்படிப்புகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாயுமானவர் திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி ஆதரவற்றோர், முதியோர், மனநலம் குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், ஒவ்வொரு குடிமகனும் ஒரு நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.